கோவை: மேட்டுப்பாளையத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்திய யானை சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்திய யானை சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் கூட்டம் அவ்வப்போது மலை அடிவார விவசாய நிலங்களுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் புகுந்து வந்தது.
இந்த நிலையில், இன்று வனத்தை விட்டு வெளியே வந்த பெண் காட்டு யானை ஒன்று தேக்கம்பட்டி அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தில் உணவு மற்றும் தண்ணீரினை தேடி வந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
பத்ரகாளியம்மன் கோவில் பின்புறம் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்தில் இறந்துள்ள பெண் காட்டு யானைக்கு காதில் ரத்தம் வழிந்தபடி உள்ளதால் யானை இயற்கையாக உயிரிழந்ததற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் மர்மநபர்களால் யானை தாக்குதலுக்கு உள்ளானதா என மேட்டுப்பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கோவையில் இருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு பிரேத பரிசோதனையானது நடைபெற்றது. இதில் அதிர்ச்சி உண்மை வெளிப்பட்டது.
யானையின் உயிரிழப்பிற்கான காரணம் அதன் தலைப்பகுதியில் காது அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து மூளையை தாக்கி யானை உயிரிழந்துள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனையின் போது யானையின் தலைப்பகுதியில் நாட்டு துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ஈயக்குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் யானை உயிரிழந்த தோட்டத்தின் உரிமையாளரான இராமசாமி மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்களது விவசாய பயிர்களை தொடர்ந்து யானை நாசம் செய்து வந்ததால் சுட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விவசாய பயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக யானையை சுட்டுக் கொன்ற சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.