கோவை: கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் உட்பட 5000 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் உட்பட 5000 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் திமுகவினர் மீது தொடர்ந்து வழக்குகள் போடும் காவல்துறையை கண்டித்து இன்று மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அலுவலகங்கள் முன்பாக கோவை மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தனி மனித இடைவெளி விட்டு திமுகவினர் காவல் துறையை கண்டித்தும், அமைச்சர் வேலுமணியை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.எல்.ஏ கார்த்திக் தெரிவித்ததாவது:-
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தனி அலுவலரால் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மாநகராட்சி இணையதளத்தில் ஏற்கப்படுவதில்லை எனவும் இது குறித்து கேள்வி எழுப்பியதற்காக தன் மீது காவல்துறை மூலம் வழக்கு போடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இதே போன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக திமுக தெற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கோவையில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூண்டுதலின் பேரிலேயே காவல்துறையினர் இதுபோன்ற வழக்குகளை பதிவு செய்ததாக குற்றம் சாட்டிய அவர், உடனடியாக திமுக மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும், திமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்படுவது தொடர்ந்தால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உட்பட 5000 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல, கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை, பொள்ளாச்சி, சிறுமுகை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பகுதிகளிலும் அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல, கோவை பீளமேட்டில், திமுக இளைஞரணி துணைச் செயலாளர் டி.செந்தமிழ் செல்வன் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வார்டு செயலாளர் பாலசுப்பிரமணியம், எஸ்.எம்.சுதாகர், பீளமேடு இளைஞர் பிரிவு துணை செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தொண்டாமுத்தூர் திமுக மைய செயலாளர் மருதமலை சேனாதிபதி உள்ளிட்டோர் திமுக உறுப்பினர்களை கைது செய்வது 'ஜனநாயக விரோதமானது' என்றும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.



