சென்னை: டாஸ்மாக் மதுபானங்களின் விலையை குவார்ட்டருக்கு ரூ.20 வரை உயர்த்தி இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: டாஸ்மாக் மதுபானங்களின் விலையை குவார்ட்டருக்கு ரூ.20 வரை உயர்த்தி இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கில், மே 4ம் தேதி முதல் சில தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும், மே 07ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகள், தவிர்த்து மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளது. அதிலும் சமூக விலகல் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 15 சதவீதம் ஆயத்தீர்வை வரியை உயர்த்தியுள்ளதால் மதுபானங்களின் விலை ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
அதன்படி, சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் சில்லறை விற்பனை விலை ரூ.10 கூடுதலாக விற்கப்பட இருக்கிறது. 180 மி.லி.,பிரீமியம் வகை மதுபாட்டில் சில்லறை விலை ரூ. 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல, நாளை டாஸ்மாக் திறக்கப்பட உள்ள நிலையில், மதுபானங்கள் வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 10 மணி முதல் 1 மணி வரை - 50 வயதுக்கு மேற்பட்டவர்களும், மதியம் 1 மணி முதல் 3 மணி வரை 40 முதல் 50 வயது வரை உள்ளோரும், 40 வயதிற்குள் உள்ளோர் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானங்கள் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.