திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் 6 ஆம் தேதி முதல் துவங்க அனுமதி அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஏற்றுமதியாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் 6 ஆம் தேதி முதல் துவங்க அனுமதி அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஏற்றுமதியாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் தெரிவித்துள்ளார்.
கொரானா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்களை துவக்குவது குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தலைமையில் ஏற்றுமதி மற்றும் அனைத்து தொழில் துறை அமைப்பினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், 6 ஆம் தேதி முதல் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் துவங்கலாம் எனவும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த பணிகளையும் துவங்கக் கூடாது எனவும் தொழிலாளர்களை நிறுவனங்களே வாகனம் வைத்து அழைத்து வர வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதோடு அடிக்கடி தொழிலாளர்களின் உடல் நிலையை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
திருப்பூரில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவிப்பவர்களின் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்த மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் அனுமதியோடு அவர்கள் சொந்த ஊர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பேட்டியளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், அரசின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று பணிகளை துவங்க இருப்பதாகவும் இந்த முறை திருப்பூருக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தக்கூடிய முழு உடற்கவசம், முக கவசம் , கையுறைகள் தயாரிக்கக்கூடிய ஆர்டர்கள் அதிக அளவில் வரக்கூடிய சூழல் இருப்பதால் இந்த தளர்வை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.