கோவை : மேட்டுப்பாளையத்தில் நில சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நேரடி தீர்வு காணும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர்.
கோவை : மேட்டுப்பாளையத்தில் நில சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நேரடி தீர்வு காணும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் நிலம் சம்பந்தமான வருவாய்த்துறை பிரச்சனைகளுக்கு தீர்வுகாண ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் ஜமாபந்தி என்னும் வருவாய் தீர்வாயம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இன்று வெள்ளியங்காடு, தோலம்பாளையம், சிக்காரம்பாளையம், மருதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நான்கு ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த கிராமமக்கள் தங்களது நிலம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார் மற்றும் வட்டாட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.
இதில், நில அளவை, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், விவசாய நிலங்கள் சம்பந்தமான சலுகைகளை பெற அளிக்கப்படும் சிட்டா, பட்டா, அடங்கல் சான்றிதழ் வேண்டி மனுக்கள் அளிக்கப்பட்டன. இதன் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, முகாம் நிறைவடையும் 25-ம் தேதி பயனாளிகளுக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வழங்கப்பட உள்ளன. இன்று முதல் நடைபெறும் இந்த முகாமில் மீதமுள்ள 14 ஊராட்சி கிராமங்களுக்கு அடுத்தடுத்து வரும் மூன்று நாட்கள் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காண உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். மேலும், இந்த ஜாமபந்தியில் வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பெறவும் உரிய ஆவணங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர்.
இதேபோல, அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் வடவள்ளி, அன்னூர், காரேகவுண்டன்பாளையம், கரியாம்பாளையம், பிள்ளயப்பம்பாளையம், மசக்கவுண்டன்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், குன்னத்தூர், பச்சாபாளையம், நாரணாபுரம் ஆகிய 11 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விரைவு பட்டா மாற்றம், விலையில்லா வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி வழங்கப்பட்ட 476 மனுக்களைப் மாவட்ட ஆட்சியர் கு. ராசமணி பெற்றுக்கொண்டார். அப்போது, வருவாய் தீர்வாயத்தின் போது பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் தனிக்கவனம் செலுத்தி உடனடி தீர்வு காண தக்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
