நீலகிரி : உதகை நகராட்சிக்குட்பட்ட நொண்டிமேடு நேரு நகர் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்குவதில்லை எனக் கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி : உதகை நகராட்சிக்குட்பட்ட நொண்டிமேடு நேரு நகர் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்குவதில்லை எனக் கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உதகை நகராட்சிக்குட்பட்ட நொண்டிமேடு பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில், நேரு நகர் மலைப்பாங்கான பகுதியில் உள்ளது. இங்கு வாழும் மக்கள் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்கள். இவர்கள், நாள்தோறும் அதிகாலை நேரங்களில் வேலைக்கு சென்று, மாலை நேரங்களில் தான் வீடுகளுக்கு திரும்புவது வழக்கம். இவர்களுக்கு, உதகை நகராட்சி சார்பில் வழங்கப்படும் தண்ணீர் மட்டுமே முக்கிய ஆதாரமாக உள்ளது. மலைப்பாங்கான பகுதி என்பதால் கிணறு மற்றும் ஊற்று போன்ற எந்தவசதிகளும் கிடையாது. இதனால், நகராட்சி தண்ணீரையே நம்பியுள்ளனர்.

இப்பகுதிக்கு நகராட்சி சார்பில் 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்குவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், இம்முறை கடந்த 15 நாட்களாக தண்ணீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், குடிக்க ஒரு குடம்கூட தண்ணீர் இல்லை எனக் கூறி நொண்டிமேடு, நேருநகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் காலிகுடங்களுடன் உதகை - குன்னூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காலி குடங்களுடன் சாலையில் பெண்கள் அமர்ந்து கொண்டதால் இரு மார்க்கத்திலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு வந்தனர். டி.எஸ்.பி., தங்கவேல் மற்றும் அதிகாரிகள் அங்கு மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அப்போது, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும், பார்சன்ஸ்வேலி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாள்தோறும் தண்ணீர் வழங்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொறியாளர் ரவி, உடனடியாக நேரு நகர் பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போதைக்கு ஒரு லாரி தண்ணீர் வழங்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது, என உறுதியளித்தார்.