கோவை : ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஹிஜ்ரி கமிட்டி மற்றும் ஜாக் கமிட்டி சார்பில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வழிபட்ட பின் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
கோவை : ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஹிஜ்ரி கமிட்டி மற்றும் ஜாக் கமிட்டி சார்பில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வழிபட்ட பின் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை எனப்படும் ஈகைத் திருநாள், பக்ரீத் பண்டிகை எனப்படும் தியாகத் திருநாள் ஆகிய இரு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில், கோவையில் ரம்ஜான் பண்டிகை எனப்படும் ஈகை திருநாள் இன்று ஜாக் கமிட்டி மற்றும் ஹிஜ்ரி கமிட்டி ஆகியவை சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த அமைப்புகள் சார்பில் இன்றைய தினம் காலை சிறப்பு தொழுகை நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹிஜ்ரி கமிட்டி சார்பில் குனியமுத்தூர் பகுதியிலும், ஜாக் கமிட்டி சார்பில் குனியமுத்தூர் ஆயிஷா மஹால் பகுதியிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சிறப்புத் தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி தங்களது அன்பை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், இன்றைய தினம் ஏழைகளுக்கும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து இந்தப் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அரபு நாடுகளில் பிறை தெரிந்தன் அடிப்படையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, ஹிஜ்ரி கமிட்டி மற்றும் ஜாக் கமிட்டி சார்பில் இன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் இருக்கும் பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் நாளைய தினம் ரம்ஜான் பண்டிகையானது கொண்டாடப்பட இருப்பது குறிப்பிடதக்கது. பெரும்பான்மை இஸ்லாமியர்கள் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதால், நாளைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.