கோவை : கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தொழில் அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமியின் உடல் இன்று மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கோவை : கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தொழில் அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமியின் உடல் இன்று மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
தொழில் அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காசாளர் பழனிச்சாமி கடந்த 3-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பழனிச்சாமியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது மகன் ரோகின் குமார் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 8-ல் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 5-ம் தேதி செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் இறுதியறிக்கை ஆகியவை முழுமையாகவும், திருப்திகரமான வகையிலும் இல்லை என்பதால், பழனிச்சாமியின் உடலை 28-ம் தேதி மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறியது. மேலும், இந்தப் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் தொழிலதிபர் மார்ட்டின் அலுவலக காசாளர் பழனிச்சாமியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும் பணி 11.30 மணிக்கு தொடங்கி 4 மணிக்கு நிறைவு பெற்றது. மாஜிஸ்திரேட் ராமதாஸ் மேற்பார்வையில் சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனை தலைமை மருத்துவர் சம்பத்குமார் முன்னிலையில், சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவர் கோகுல்ராம், கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் பழனிச்சாமியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், பிரேத பரிசோதனை முடிந்த பின்பு குழுவினர் பழனிச்சாமி உயிரிழந்த குளத்தை பார்வையிட சென்றுள்ளனர்.

இந்த நிலையில் பழனிச்சாமியின் மனைவி செய்தியாளர்களிடம் கூறும்போது :- பிரேத பரிசோதனை முடிந்தவுடன் எங்கள் தரப்பு மருத்துவ குழுவினர் எனது கணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த குளத்தை பார்வையிடச் சென்றுள்ளனர். இந்த பிரேத பரிசோதனை குறித்து இதுவரை மருத்துவர்கள் தரப்பில் எந்த பதிலும் எங்களிடம் சொல்லவில்லை. ஒருவேளை கொலையாக இருக்கும் பட்சத்தில், கொலை குற்றவாளியைக் கடுமையாக தண்டிக்க வேண்டும். ஒருவேளை தற்கொலையாக இருந்தால் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரிந்து இறந்த சம்பவத்தில் எனது கணவரின் மரணம் குறித்து காவல்துறைக்கு நாங்கள் புகார் அளித்தும், மார்ட்டின் உள்ளிட்டவர்களிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.
மருத்துவர்கள் கூறும் முடிவின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.