கோவை : இருகூர் அருகே உள்ள பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால், குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சாம்பலாகின.
கோவை : இருகூர் அருகே உள்ள பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால், குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சாம்பலாகின.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் இருகூர் பகுதியில் சுமார் 7 ஆண்டு காலமாக பஞ்சு சேமிப்பு கிடங்கு வைத்துள்ளார். மேலும், இங்கு சேமித்து வைக்கும் பஞ்சுகளை பஞ்சாலைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் ஒரு கோடி மதிப்புள்ள பஞ்சுகளை கிடங்கில் புதிதாக சேமித்து வைத்திருந்தார். இந்த நிலையில், இன்று காலை அந்த குடோனில் இருந்து லேசாக கரும்புகை கிளம்பியுள்ளது. இதை கண்ட அருகே இருந்த பொதுமக்கள் தீ விபத்து ஏற்பட்டிருப்பதை அறிந்து தீயணைப்பு துறையினருக்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், தீயானது கட்டுக்குள் அடங்காததால், மேலும் மூன்று வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. பின்னர், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ பரவியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.