கோவை : ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் தொடர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ராஜகோபால் தெரிவித்தார்.
கோவை : ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் தொடர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ராஜகோபால் தெரிவித்தார்.
ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் தொடர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை கைது செய்தது தொடர்பாக கோவை ரயில்நிலையத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் அறையில் ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ராஜகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- சேலம், ஈரோடு பகுதிகளில் ரயிலில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தது. மேலும், சேலம், ஈரோடு பகுதிகளில் நடந்த 12 சம்பவங்களில் 53 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய அளவில் ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில், குற்றவாளிகளை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளையர்கள் மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் கைது செய்யபட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். மேலும், இந்த கொள்ளையர்கள் ரயில் மெதுவாக செல்லும் இடங்களை கண்டறிந்து, ஜன்னல் அருகே இருக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் குடும்பமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில், ரயில்வே போலீசார் சந்தேகப்படும் நபர்களை புகைப்படம் எடுத்து 99625 - 00500 இந்த வாட்ஸப் எண்ணுக்கு அனுப்பினால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோடை விடுமுறையையொட்டி, ஜன்னல் ஓரத்தில் உறங்கியபடி பயணம் செய்யும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.