கோவை : நெல்லை லாலா முத்து விலாஸ் இனிப்பு கடை நிறுவனத்தில் மேலாளர் போன்ற உயர் பொறுப்புகளில் பணிபுரிய நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் 30 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து மோசடி செய்த வழக்கில் கடையின் நிர்வாக இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
கோவை : நெல்லை லாலா முத்து விலாஸ் இனிப்பு கடை நிறுவனத்தில் மேலாளர் போன்ற உயர் பொறுப்புகளில் பணிபுரிய நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் 30 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து மோசடி செய்த வழக்கில் கடையின் நிர்வாக இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
கோவை கணபதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் எம்.எஸ்.ஆர் பாலச்சந்திரன். இவர் நெல்லை முத்து விலாஸ் இனிப்புக் கடையின் நிர்வாக இயக்குனராக உள்ளார். இவர், சில நாட்களுக்கு முன்பு பிரபல தனியார் நாளிதழுக்கு தனது நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை என விளம்பரம் செய்திருந்தார். இதையடுத்து, விளம்பரத்தைப் பார்த்து வந்த நபர்களிடம் நேர்காணல் நடத்தினார். இந்த நிலையில், மேலாளர் பொறுப்பு தருவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.30,000 முதல் ரூ. 40,000 வரை என ஆட்களுக்கு தகுந்தாற் போல் வசூல் செய்துள்ளார். இப்படி இவர் சுமார் 30 லட்ச ரூபாய் வரை வசூல் செய்துள்ளார்.

இந்த சூழலில், பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி கேட்ட பொழுது பணத்தையும் தரவில்லை, வேலையும் தராமல் காலதாமதித்து வந்தார். இதையடுத்து, பணத்தை கேட்டு வந்தால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபரில் ஒருவரான மாடசாமியின் மகன் கோவிந்தராஜ் என்பவர் மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் பாலச்சந்திரனை பிடிக்க மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரணின் உத்தரவின் பேரில், துணை ஆணையாளர் பெருமாளின் மேற்பார்வையில், உதவி ஆணையாளர் சந்திரசேகர் மற்றும் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான தனிப்படையினர் பாலச்சந்திரனை கைது செய்தனர்.
