மதுரை : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தடைவிதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிராகரித்துள்ளது.
மதுரை : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தடைவிதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிராகரித்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, கமல் மீது அவரக்குறிச்சியில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தோப்பூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தான் கூறிய கருத்து சரித்திர உண்மை என கமல் கூறியிருந்தார்.
இந்த சர்ச்சை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனுவை அவரச வழக்காக விசாரிக்கவும் கோரப்பட்டது. ஆனால், மதுரை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கும்படியும், அதனை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசி வருவதாகவும், ஆகவே அவர் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. ஆனால், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறிய நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, பிரச்சாரத்திற்கு தடை விதிக்கலாமா இல்லையா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும் என்றும், எனவே இந்த வழக்கை அவரச வழக்காக ஏற்று விசாரிக்க முடியாது என கூறி முறையீட்டை நிராகரித்தனர்.