கோவை : மதுக்கரை காவல் ஆய்வாளர் மாவட்ட செயலாளர் போல் செயல்படுவதாகவும், அவருக்குப் பதிலாக நேர்மையான அதிகாரியை பணியமர்த்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் மனு அளித்துள்ளார்.
கோவை : மதுக்கரை காவல் ஆய்வாளர் மாவட்ட செயலாளர் போல் செயல்படுவதாகவும், அவருக்குப் பதிலாக நேர்மையான அதிகாரியை பணியமர்த்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் மனு அளித்துள்ளார்.
ம.தி.மு.க மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளிக்க வந்திருந்தார். தேர்தல் பணிகளில் ஆட்சியர் ஈடுபட்டிருப்பதால், அவரது நேர்முக உதவியாளரிடம் மனு அளித்துச் சென்றார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- மதுக்கரை காவல் ஆய்வாளர் தூயமணி ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் போல் நடந்து கொள்கிறார். தேர்தல் நேரம் என்பதால் அவரை மாற்றி நேர்மையான அதிகாரியை அங்கு பணியமர்த்த வேண்டும், என குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "தற்போது மதுக்கரை காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்று உள்ள தூயமணி, இதற்கு முன்பு பேரூர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் இங்கு பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுங்கட்சிக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். மேலும், பொதுக் கூட்டங்களை நடத்த மனு அளிக்கப்பட்டால், கடைசி வரை இழுத்தடித்து அனுமதி மறுப்பதோடு, அங்கு புகார் அளிக்க வருபவர்களை தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசுகிறார். தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறி வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் இவரை மாற்றி, வேறு ஒரு நியாயமான அதிகாரியை அங்கு பணியமர்த்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் இல்லாத காரணத்தால் மனுவை ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனுவை அளித்து உள்ளோம். உரிய நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும், என்றார்.