கோவை : நீண்ட இழுபறிக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க. - தே.மு.தி.க., கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
கோவை : நீண்ட இழுபறிக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க. - தே.மு.தி.க., கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் போது, தமிழகத்தின் 21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், மார்ச் 19-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மார்ச் 26-ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள். மார்ச் 27-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை. மார்ச் 29-ம் தேதி மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி விவகாரங்களில் தமிழக அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., இடம் பெற்றுள்ளன. தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.எம்., சி.பி.ஐ., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வருவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தொகுதி பங்கீட்டால் இழுபறி நீடித்து வந்தது. தமிழக அரசியல் களம் இப்போது தே.மு.தி.க.,வை மையமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தது. தே.மு.தி.க.,வின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தீவிரமாகக் கவனிக்கப்பட்டு வந்தன. மேலும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேசப்பட்டு வந்த வேளையில், தி.மு.க.வினரையும் தே.மு.தி.க.வினர் சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இதற்கு தே.மு.தி.க.வினர் மறுப்பு தெரிவித்தனர். அதோடு, இன்னும் இரு தினங்களில் கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட சூழலில், கூட்டணியை இறுதி செய்வதற்காக அ.தி.மு.க., தே.மு.தி.க.வினர் சென்னை கிரவுன்பிளாசா ஓட்டலுக்கு வருகை புரிந்தனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட இரு கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தே.மு.தி.க.விற்கு 4 இடங்கள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், இரு கட்சியின் தலைவர்களும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
நீண்ட இழுபறிக்கு பிறகு தே.மு.தி.க.வுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டதால், அ.தி.மு.க., பா.ஜ.க., மற்றும் பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் நிம்மதி கலந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.