கோவை : கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் 2 வயது குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கக் கோரி குழந்தையின் தந்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் 2 வயது குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கக் கோரி குழந்தையின் தந்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவை சேர்ந்த தம்பதிகள் விஸ்வநாதன் (28) சித்ரா (25). இவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. மேலும், அந்த மருத்துவமனையில் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து, குழந்தையை சுமார் 32 நாட்கள் மருத்துவமனையிலே வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 11ம் தேதியன்று அவர்களின் பெண் குழந்தை மஞ்சுவிற்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மேல்சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், குழந்தைக்கு ரத்தம் செலுத்தப்பட்ட குடுவை குப்பைத்தொட்டியில் வீசப்பட்டிருந்தது. இது தொடர்பாக, மருத்துவர்களிடம் விளக்கம் கேட்ட போது, அவர்களின் பதில் குழந்தையின் பெற்றோர்களுக்கு சந்தேகத்தை உருவாக்கியது.

மேலும், எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்டதாகப் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு எச்.ஐ.வி. இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தையின் தந்தை மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிப்பதில்லை. மிரட்டும் பாணியில் மருத்துவமனை ஊழியர்கள் பேசுகின்றனர். மேலும், ஊடகங்களில் பேசக்கூடாது என மிரட்டுகின்றனர். ஆகவே, தன்னுடைய குழந்தைக்கு முறையான சிகிச்சை வழங்க வேண்டும். தன் குழந்தையைக் காப்பாற்றி தர வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.