திருப்பூர் : உடுமலை அருகே சின்னதம்பியை பிடித்து செல்ல கோரி 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் செய்து வருகின்றனர்.
திருப்பூர் : உடுமலை அருகே சின்னதம்பியை பிடித்து செல்ல கோரி 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் செய்து வருகின்றனர்.

திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் கடந்த 5 நட்களாக சின்னதம்பி சுற்றி வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலையில் அங்கிருந்து செங்கழனிபுதூா் பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள கரும்பு, நெல் ஆகிய பயிர்களை சேதப்படுத்தியது. இதனால், விவசாயிகள் அச்சமடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சின்னதம்பியை பிடித்து செல்ல வலியுறுத்தி கிருஷ்ணாபுரத்தில் 100 -க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தால், கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வரும் வரை சின்னதம்பியை பிடிக்க முடியாது என வனத்துறையினர், விவசாயிகளிடம் தெரிவித்தனர்.
இதனிடையே, கடந்த 5 நாட்களாக எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் சுற்றி வந்த சின்னதம்பி, அமராவதி சர்க்கரை ஆலை நிர்வாகம், அங்கிருந்த முட்புதர்களை ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்ததையொட்டி, அந்த பகுதிக்குள் செல்ல நேற்று முதல் மறுத்து வந்தது. மேலும், இன்று விவசாய நிலங்களில் புகுந்ததால் விவசாயிகள் சின்னதம்பியை பிடித்து செல்லக் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.