கோவை : தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 1,108 பயனாளிகளுக்கு ரூ. 8.5 கோடி மதிப்பில் தொழிற்கடனுதவிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை : தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 1,108 பயனாளிகளுக்கு ரூ. 8.5 கோடி மதிப்பில் தொழிற்கடனுதவிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் சுயதொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் வங்கிக்கடன் வழங்கும் விழா நேற்று ஊரக வளர்ச்சித்துறையின் செயலர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளருமான ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் நடைபெற்றது. இம்முகாமினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
முத்ரா திட்டத்தின் கீழ் 31 பயனாளிகளுக்கு ரூ. 31.55 லட்சம் மதிப்பிலும், அமுதசுரபி நிதித் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு ரூ. 5.15 லட்சம் மதிப்பிலும், தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிகளுக்கு ரூ.17 லட்சமும், தனிநபர் தொழில் கடன் வழங்க 208 பயனாளிகளுக்கு ரூ. 222.44 லட்சம் மதிப்பிலும், 44 மகளிர் சுயஉதவிக் குழுக்குளுக்கு ரூ. 195.31 லட்சம் மதிப்பிலும், 5 விவசாயிகளுக்கு விவசாயக்கடனாக ரூ. 29.5 லட்சமும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஆகியவற்றின் மூலம் 26 சுய உதவிக்குழுக்கள் உட்பட 460 நபர்களுக்கு ரூ.3.50 கோடி மதிப்பிலும் என மொத்தமாக 1108பயனாளிகளுக்கு ரூ.8.5 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.
7 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ. 10.25 லட்சம் மதிப்பிலான நிவாரணத் தொகையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் கிறிஸ்துவ ஆலயங்கள் பராமரிப்பு பணிக்காக கோவை மாவட்டத்தில் முதல்முறையாக புலியகுளத்திலுள்ள ஜெருசலேம் பிரேயர் தேவாலயத்திற்கு ரூ. 75,000-ம், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலமாக 10 நபர்களுக்கு தலா ரூ. 5,000 வீதம் ரூ. 50,000ம் நிதியுதவியும், 13 நபர்களுக்கு ரூ. 65,234 மதிப்பில் சலவைப் பெட்டிகளையும் அவர் வழங்கினார்.