கோவை : தடாகம் அருகே 200 அடி கிணற்றில் குடிபோதையில் ஓட்டப்பட்ட டிப்பர் லாரி விழுந்த விபத்தில், இருவரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை : தடாகம் அருகே 200 அடி கிணற்றில் குடிபோதையில் ஓட்டப்பட்ட டிப்பர் லாரி விழுந்த விபத்தில், இருவரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சின்னதடாகம் பகுதியை அடுத்த வீரபாண்டி பகுதியில் ராஜப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் தோட்டப்பகுதியில் உள்ளது. இவருடை தோட்டப்பகுதியில் சுமார் 200 அடி ஆழமுள்ள கிணற்றில் நேற்று இரவு டிப்பர் லாரி ஒன்று நிலைதடுமாறி விழுந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில், அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த லாரியில் இருந்து மணி என்பவரை உயிருடன் மீட்டனர்.

பின்னர், அவரிடம் விசாரித்ததில் தனது நண்பர்களான பாலமுருகன், செல்வன் ஆகியோருடன் லாரியில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி விவசாய கிணற்றில் விழுந்ததாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, படுகாயம் அடைந்த அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லாரியின் அடியில் சிக்கியுள்ள இருவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், லாரியை மேலே கொண்டு வந்தால் மட்டுமே அவர்களை மீட்க முடியும் என்பதால், ராட்சத கிரேன் கொண்டு வந்து லாரியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, தண்ணீர் இல்லாத சேறு நிறைந்த கிணற்றில் விழுந்த லாரியின் அடியில் சிக்கியுள்ள இருவரும் இறந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும், குடிபோதையில் அதிவேகமாக லாரியை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.