கோவை : பாலக்காடு சாலை மற்றும் சுண்டக்காமுத்தூர் பைபாஸ் சாலைக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் சாலை அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.
கோவை : பாலக்காடு சாலை மற்றும் சுண்டக்காமுத்தூர் பைபாஸ் சாலைக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் சாலை அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.
உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலத்திற்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதால், பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலைகளில் வரும் வாகனங்கள் அனைத்தும் புட்டுவிக்கி பாலம் அருகில் உள்ள இணைப்பு சாலை மற்றும் பேரூர் பைபாஸ் வழியாக அனுமதிக்கப்பட்டது.

இதனால், வாகன ஓட்டிகள் உக்கடத்தை அடைவதற்கு பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும், மழைக் காரணமாக புட்டுவிக்கி பாலம் அருகே உள்ள இணைப்பு சாலை படுமோசமான நிலையில் காட்சியளித்தது. குனியமுத்தூர், தொண்டாமுத்தூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் கோவைக்கு வந்து செல்லும் வாகன ஓட்டிகள் சேதமான சாலையைக் கடப்பதில் கடும் சிரமங்களை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், பாலக்காடு சாலை மற்றும் சுண்டக்காமுத்தூர் பைபாஸ் சாலைக்கு இடையில் சுமார் 3 கி.மீ அளவிற்கான இணைப்பு சாலையை புதுப்பிக்கும் பணிகள் மாநகராட்சி சார்பில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை, கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சாலை புனரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். மேலும், நகரின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் சாலை அமைக்கும் பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து, விரைவில் அப்பணிகள் முடிக்கப்படும்," என்றனர்.
சாலை புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால், வாகனங்கள் சுண்டக்காமுத்தூர் சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.