கோவை: கடந்த 2010-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 5,56,000 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். புற்றுநோய் தாக்குவதற்கான முதன்மைக் காரணமாக இருப்பது புகையிலை என்றும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
கோவை: கடந்த 2010-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 5,56,000 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். புற்றுநோய் தாக்குவதற்கான முதன்மைக் காரணமாக இருப்பது புகையிலை என்றும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆண்களில் 45 விழுக்காடு வரையிலும் பெண்களில் 20 விழுக்காடு வரையிலும் புற்றுநோய்க்கு காரணமாக இருப்பது புகையிலை (குட்கா) பொருட்கள் தான் என்ற புள்ளி விவரங்கள் உள்ளன. இதுபோன்ற தொடர் பாதிப்புகளால் பான் மசாலா குட்கா பொருட்கள் மீது தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு பகுதிகளிலும் பான் மசாலா, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தொடர் சோதனை
தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தொடர் சோதனைகளில் கிலோ கணக்கான பான் மசாலா, குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்படுகின்றன. அதேபோல சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவும் செய்து வருகின்றனர். ஆனாலும், ராஜவீதி, தாமஸ் வீதியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் குடோன்களில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு வருகின்றது.
நேற்றைய சோதனை
இந்த நிலையில், டவுன்ஹால் அடுத்த தாமஸ் வீதியில் நேற்று மாலை குட்கா குடோன் ஒன்றில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே பகுதியில், மற்றொரு வீட்டிலும் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த பதுக்கல் தொடர்பாக விசாரித்ததில் அந்த வீட்டின் உரிமையாளர் பெயர் சந்தோஷ் என்றும், பூட்டப்பட்ட அந்த வீட்டில் குட்கா பொருட்கள் இருப்பதும் விசாரணையின் போது அதிகாரிகள் தெரிந்து கொண்டனர்.
நள்ளிரவு வரை..
குட்கா பதுக்கல் தொடர்பாக அதன் உரிமையாளரான சந்தோஷ்-க்கு நேற்று மாலை 6 மணிக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர். அவரிடம் வீட்டைத் திறக்கும்படியும் அதுவரை காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், மணிக்கணக்காக காத்திருந்தும் சந்தோஷ் வரவில்லை. இதனால் இரவு 12 மணி வரை அந்த வீட்டின் வாசலிலே காத்திருந்தனர் அதிகாரிகள். ஆனாலும், சந்தோஷ்-இடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால், காவல் துறையினர் உதவியுடன் ஜன்னலை உடைத்து, வெளியில் இருந்தபடி பார்த்து வீட்டின் உள்ளே குட்கா பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தினர்.

இதில் சந்தோஷ் அங்கு வந்து வீட்டின் பூட்டை திறக்காததால் அந்த வீட்டிற்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். காலை சர்ச் வாரண்ட் வாங்கிய பிறகு, பூட்டை உடைத்து வீட்டினுள் சோதனை செய்ய இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 20 நாட்களில் அதிரடி
கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி தாமஸ் வீதியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், காலையில் 750 கிலோவும், மாலையில் 350 கிலோவுமாக குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

அதேபோல ஜூலை மாதம் நான்காம் தேதியில் பொன்னைய ராஜபுரம் பகுதியில் சுமார் 2 டன் குட்கா பொருட்கள் உள்ள குடோனுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ஜூலை 9-ம் தேதியன்று தாமஸ் வீதியில் 750 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று நடத்திய சோதனையில் 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் மாலை அங்குள்ள வீட்டு குடோனுக்கு அதிகாரிகள் காத்திருந்து நடு இரவில் சீல் வைத்தனர்.

கடந்த 20 நாட்களில் மட்டும், கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கிலோ கணக்குகள் மறைந்து, டன் கணக்கில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
என்ன தான் அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகள் செய்து, பான் மசாலா, குட்கா பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்தாலும் மீண்டும்-மீண்டும் குட்கா பொருட்கள் பதுக்கப்படுவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.