மழையினால் இடிந்து விழும் பழைய மண் வீடுகளில் மீட்புப் பணியை மேற்கொள்ள தீயணைப்பு படையினர் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை: மழையினால் இடிந்து விழும் பழைய மண் வீடுகளில் மீட்புப் பணியை மேற்கொள்ள தீயணைப்பு படையினர் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவையில் கடந்த இரண்டு மாதங்களாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வந்தந்து.
இதனால், ஆங்காங்கே மரங்களும், மின் கம்பிகளும் முறிந்து விழுந்தன. மேலும், பழைய ஓட்டு வீடுகளும் இடிந்து சேதமடைந்தன.

இந்த நேரத்தில், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உயிர் பலி இல்லை என்றால் புறக்கணிப்பு செய்வதாகவும், இதனால், ஆபத்தான மீட்புப் பணிகளை அந்தந்த பகுதி மக்களே செய்து வருவதாகவும் தெரிகிறது.
இது குறித்து ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மோசஸ் என்பவர் கூறுகையில், "இன்று மாலை எங்களது வீட்டருகே உள்ள பழைய ஓட்டு வீடு திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தின் போது அங்கு யாரும் இல்லாததால் உயிர் பாதிப்புகள் ஏற்படவில்லை.
ஆனால் அந்த வீட்டில் கியாஸ் சிலிண்டர் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்தன.
தொடர் மழையால், சரிந்த அந்த வீடு மேலும், சாயும் நிலையில் இருந்தது.
எனவே இது தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு போன் மூலம் அழைத்தோம்.
ஆனால் அவர்கள், "உயிர்பலி ஏதும் இருக்கிறதா?" என கேட்டு, இல்லை என்ற பதில் கிடைத்தவுடன் மீட்பு பணிக்கு வர மறுத்துவிட்டனர்.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களே, ஆபத்தான நிலையில் உள்ள அந்த வீட்டினுள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இது எந்த நேரத்திலும் ஆபத்தை விளைவிக்கும்."என்றார்.
உயிர் பலி இருந்தால் தான் மீட்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற அவசரகாலங்களில், பொதுமக்கள் அழைத்தவுடன் சம்பவ இடங்களுக்கு மீட்புப்படையினரும், தீயணைப்பு படை வீரர்களும் செல்ல வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.