கோவை: புதிய பேருந்து சேவைகளின் தொடக்க விழாவிற்கு தாமதமாக வந்ததால், உக்கடம் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் அமைச்சர் மீது அதிருப்தியடைந்தனர்.
கோவை: புதிய பேருந்து சேவைகளின் தொடக்க விழாவிற்கு தாமதமாக வந்ததால், உக்கடம் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் அமைச்சர் மீது அதிருப்தியடைந்தனர்.

கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று 25 புதிய பேருந்து தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைசார் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இவ்விழா நடைபெற்றது. காலை 10 மணிக்கு விழா நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், அதிகாரிகள், மக்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பயணிகள் என பல்வேறு தரப்பினரும் 10 மணிக்கே குவியத் தொடங்கினர். அதன்பின், சட்டமன்ற உறுப்பினர்களும் வந்துவிட்ட நிலையில், அமைச்சர் மதியம் 12.45 மணிக்கு வந்தார்.

அமைச்சர் வருகையையொட்டி 3 மணி நேரத்திற்கும் மேலாக அனைவரும் காத்திருந்தனர். பயணிகளும் புதிய பேருந்துகளில் பயணிக்க ஆர்வமுடன் காத்திருந்த நிலையில் பலமணி நேரம் ஆனதால் கடுப்பாகினர்.
இது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், "அமைச்சர் அவர்களுக்கு நிறையப் பணிகள் இருக்கும். அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், நேரம் ஒன்று நிகழ்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிலையில், அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவர் தாமதமாக தான் வருகிறார்," என்றார்.
பயணி ஒருவர் கூறுகையில், "3 மணி நேரமாக புதிய பேருந்தில் பயணிக்கலாம் என காத்திருந்தேன். அமைச்சர் வருகையில் தாமதம்தான் இதற்கு காரணம் என்றார். உக்கடம் பேருந்து நிலையத்தின் உள்ளே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், சில நகர பேருந்துகள் பல மணி நேரம் பயணிகளை வெளியே நிறுத்தி தான் ஏற்று சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.