கோவை: கோவையில் நடைபெற உள்ள இண்டெக்ஸ் விவசாய கண்காட்சியில் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த பால் பண்ணை என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையில் நடைபெற உள்ள இண்டெக்ஸ் விவசாய கண்காட்சியில் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த பால் பண்ணை என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட சிறு தொழிற்சாலைகள் சங்கமான கொடீசியா சங்கம் சார்பில் ஆண்டுதோறும் இண்டெக்ஸ் என்ற பெயரிலான விவசாய தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டிற்கான 18-வது இண்டெக்ஸ் கண்காட்சி வருகிற 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை கோவை கொடீசியா அரங்கில் நடைபெற உள்ளது.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பு அச்சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி, "விவசாய துறை பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் இக்கண்காட்சி சிறு, குறு விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

இயந்திரம் சார்ந்த துறையாக விவசாய தொழிலை மாற்ற வேண்டிய தருணம் இது. இக்கண்காட்சியில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன." என்றார்.
கொடீசியா தலைவர் ராமமூர்த்தி கூறும் போது, "கடந்தாண்டு இக்கண்காட்சியில் 60 கோடி ரூபாய் அளவிற்கு நேரடி வர்த்தகமும், 100 கோடி ரூபாய் அளவிற்கு தொழில் விசாரணைகளும் வந்தது. இவ்வாண்டு 80 கோடி ரூபாய் அளவிற்கு நேரடி வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். இக்கண்காட்சி மூலம் விவசாயிகள் பலனடைவதோடு கோவை மாவட்டத்தில் உள்ள சிறு குறு தொழிற்சாலைகளும் தொழில் வாய்ப்புக்களை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்." என்றார்.