கோவை: உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் அழுகிய நிலையில் இருந்த பத்து கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை: உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் அழுகிய நிலையில் இருந்த பத்து கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் மாநகரில் உள்ள பெரும்பாலான ஆவின் பாலகங்களில் சோதனை நடத்தினர். இந்த நிலையில், உக்கடம் பகுதிகளில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

அங்கு மொத்தமுள்ள 110 கடைகளில் மீன்களுக்கென்றே பிரத்யேகமாக செயல்படும் 48 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், மீன்கள் நல்ல நிலையில் உள்ளதா? அதனைப் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள ஐஸ் கட்டிகள் நல்ல நிலையில் உள்ளதா? பதப்படுத்த ஏதேனும் ரசாயனங்கள் போடப்பட்டுள்ளதா? என்பவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை கூறுகையில், "ஆய்வின் போது மீன்களை விற்க பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது என விற்பனையாளர்களிடம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மீன்கள் சுத்தம் மற்றும் சுகாதாரமானதாக விற்பனை செய்யப்படுகிறதா? என பார்க்கப்பட்டது. மீன் செதில்களை குளக்கரையில் கொட்டக்கூடாது என்றும், மீன்களை பதப்படுத்த அதற்கேற்ற நீல நிற ஐஸ் கட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்றார்.