கோவை: அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டலம் சார்பாக கோவை முதல் சேலம் வரை எவ்வித நிறுத்தமும் இல்லாமல் நடத்துனர் இல்லா பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
கோவை: அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டலம் சார்பாக கோவை முதல் சேலம் வரை எவ்வித நிறுத்தமும் இல்லாமல் நடத்துனர் இல்லா பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஈரோடு போக்குவரத்து மண்டலத்தில் ஏற்கனவே 'ஈரோ-100' என்கிற பெயரில் ஆறு பேருந்துகள் ஈரோடு-கோவை வரை நடத்துனர் இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போல் கோவையில் முதன் முதலில் இரண்டு பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படுகிறது.
முன் படியில் கதவுகளுடன் இந்த பேருந்து தரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்தில் ஏறியவுடன் கதவுகள் அடைக்கப்படும். பேருந்தில் ஏறவும், இறங்கவும் முன் பக்கம் மட்டுமே உபயோகம்படுத்த முடியும். பயணிகளுக்கு அவசர தேவை என்றால் பேருந்து ஓட்டுனரை அணுகலாம்.
மேலும், இருக்கைகள் புஷ்-பேக் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சிரமமின்றி பயணிக்க முடியும்." என்றார்.
நடத்துனர் இல்லாமல் இயங்கும் இந்த பேருந்து குறித்து பயணிகள் கூறுகையில், "இடையில் எந்த பேருந்து நிறுத்தங்களிலும் நிற்காமல் செல்லும் இந்த பேருந்தில் பயணிப்பதன் மூலம் எங்கள் பயண நேரம் மிச்சமாகும். அனைவருக்குமான இருக்கைகள் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளன." என்றனர்.

வேலை பறிபோகும்
இந்த பேருந்தில் சில வசதிகள் இருந்தாலும், இந்த திட்டத்தால் நடத்துனர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால், வரும் காலங்களில் நடத்துனர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோகும் என்றும், தற்போது இது நன்மையாகத் தெரிந்தாலும் கூட பயணிகளுக்கு பாதுகாப்புக்கு நடத்துனர் அவசியம் என்கின்றது நடத்துனர் தரப்பு.
இந்த திட்டம் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இன்று செயல்படுத்தப்பட்டன. இதற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.