திருப்பூர் : பெருமாநல்லூர் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் ஜன்னல் கதவு பறந்து சென்று விழுந்ததில் 3 சிறுமிகள் பலத்த காயமடைந்தனர்.
திருப்பூர் : பெருமாநல்லூர் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் ஜன்னல் கதவு பறந்து சென்று விழுந்ததில் 3 சிறுமிகள் பலத்த காயமடைந்தனர்.
திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் நெசவாளர் காலனி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி வளாகத்திலேயே தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இரு பள்ளிகளிலும் 1,600 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி முடிந்ததும் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவிகளான சிவப்பிரியா (8), மோனிகா (8) மற்றும் கீர்த்தனா(8) ஆகியோர் பள்ளியின் புதிய கட்டிடம் பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, பள்ளியின் 2-ம் தளத்தில் இருந்த ஜன்னல் கதவு காற்றுக்கு பெயர்ந்து, முதல் தளத்தின் பக்கவாட்டு சுவரில் பட்டு அங்கிருந்த சிறுமிகள் மூவர் மீதும் விழுந்தது. இதில், மூவரும் காயம் அடைந்தனர்.
இதையடுத்து, அங்கு இருந்த சகமாணவிகள் மற்றும் ஆசிரியைகள் உடனடியாக மூவரையும் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதில், சிவப்பிரியா காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். பள்ளியின் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையும், பள்ளி கட்டிடத்தை அலட்சியமாக கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவிகளின் பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது:- பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.