மேட்டுப்பாளையம்: நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு வகையில் அதிகம் உபயோகப்படுத்தும் இரும்புச்சத்துள்ள கருவேப்பிலை மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டில் 100 சதவீதம் பயன்பாட்டில் கருவேப்பிலை உள்ளது.
மேட்டுப்பாளையம்: நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு வகையில் அதிகம் உபயோகப்படுத்தும் இரும்புச்சத்துள்ள கருவேப்பிலை மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டில் 100 சதவீதம் பயன்பாட்டில் கருவேப்பிலை உள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் சுமார் 3,000 ஏக்கரில் பிரதான விவசாயமாக கறிவேப்பிலை உள்ளது. இதில் காரமடை சுற்றுவட்டார பகுதியில் விளையும் செங்காம்பு கருவேப்பிலை வாசனையும்,சுவையும் மிகுந்தது. சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்படும் கருவேப்பிலை நான்கு கால இடைவேளையில் அறுவடை செய்யப்பட்டு வியாபார சந்தைக்கு வருகிறது.

ஏற்றுமதி
தேரம்பாளையம், காரமடை, பெள்ளாதி போன்ற பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இடை தரகர்கள் மூலம் வியாபாரமாகும் கருவேப்பிலை கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து தொழிற்சாலைகள் மூலம் பொடியாக்கப்பட்டு அரபு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நீண்டநாட்கள் வைத்து உபயோகப்படுத்தும் சத்தான மற்றும் வைட்டமின் உள்ள உணவுப் பொடியாக இருப்பதால் மேலை நாடுகளில் சிறப்பான வரவேற்பு உள்ளது. ஆனால், இதை பயிர் செய்யும் விவசாயிகளின் நிலை தான் வருத்தமளிக்கிறது.
விலை இல்லை
குறைவான நீராதாரம் உள்ள நிலங்கள் ,வறட்சி மற்றும் பருவ நிலை மாற்றம் தாங்கக்கூடிய பயிராக கருவேப்பிலையாக உள்ளது. உரம் ,கூலி பராமரிப்பு என அதிக செலவு செய்து பயிரிடப்படுகிறது. ஆனால், அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
இது குறித்து விவசாயி அருள்ராஜ் என்பவர் கூறுகையில், "ஆண்டிற்கு நான்கு பருவகாலங்களில் கருவேப்பிலை அறுவடை செய்யப்படும். ஆனால், ஒரு முறை மட்டுமே விவசாயிகளுக்கு லாபமான விலை கிடைக்கிறது. அதுவும் பனிக் காலங்களில் மட்டும் தான். காரணம் செடிகள் வளராத காரணத்தால் அதன் அடர்த்தி மிகக்குறைவாக இருப்பதால் அந்த நேரத்தில் மட்டும் விலை அதிகமாகும்.

ஆனால், அதன் உற்பத்தி மிகவும் கணிசமான அளவில் மட்டுமே இருக்கும். விவசாயிகளுக்கு இந்த விலையினால் பலன் இருக்காது. கிலோ ஒன்றுக்கு ரூபாய் 6 முதல் 10 வரை மட்டுமே தற்போது கிடைக்கிறது. மற்ற காலங்களில் ரூபாய் 14 முதல் 20 வரை கிடைக்கும்." என்றார்.
இதனிடையே, நோய் தாக்கம் போன்ற நேரங்களில் விலை வீழ்ச்சி ஏற்படும் போது, மனம் வருந்தும் விவசாயிகள் பயிரை பிடுங்கி வீச வேண்டிய நிலையும் ஏற்படும். இதற்கெல்லாம் தீர்வு ஏற்படுத்த கருவேப்பிலை பொடி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தொழிற்சாலை
இது குறித்து சமூக ஆர்வலரான குப்புராஜ் என்பவர் கூறுகையில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் மேட்டுப்பாளையத்தில் கருவேப்பிலை தொழிற்சாலை அமைக்கப்படும் என அறிவித்தார். மேலும், இந்த தேர்தலிலும் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த திட்டம் நிறைவேற்றப்பட வில்லை. இதனை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றித் தந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்." என்றார்.
மேலும், தனியார் கருவேப்பிலை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டால் அரசு மானியம் அளிக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த தவறினால் இந்த பகுதியில் கருவேப்பிலை விவசாயம் பெருமளவில் குறையத் தொடங்கும், எனவே விவசாயிகளின் துயரை துடைக்க உடனே அரசு அறிவித்தபடி தொழிற்சாலையை அமைக்க வேண்டும், கருவேப்பிலைக்கு என தனி கூட்டுறவுச் சங்கம் தொடங்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.