அத்தியாவசிய மருந்துகளில் ஒன்றான ஜெனடிக் மருந்துகளை, வாடிக்கையாளர்களின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள மருந்துக்கடைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்தியாவசிய மருந்துகளில் ஒன்றான ஜெனரிக் மருந்துகளை, வாடிக்கையாளர்களின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள மருந்துக்கடைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
.உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவக் கருவிகள் அத்தியாவசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஜெனடிக் மருந்துகளின் விலையை மத்திய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் கண்காணித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இருப்பினும், பிராண்ட் பெயரில் உள்ள மருந்துகளின் விலை மிக அதிகமாக உள்ளது. பிராண்ட் பெயரில் உள்ள மருந்துகளுக்கு இணையாக ஜெனரிக் (பொதுப்பெயரில்) மருந்துகள் பல மடங்கு குறைந்த விலையில் இருந்தும், கமிஷனுக்காக நோயாளிகளிடம் மருந்துக்கடைக்காரர்களும் இதைக் கூறுவதில்லை.
மருத்துவர்கள் ஜெனரிக் பெயரை மட்டுமே சீட்டில் எழுதித்தர வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும், பிராண்டுகளால், வீண் பணச்செலவை தடுக்கும் வகையில், பொதுமக்களே பொதுப்பெயரில் உள்ள மருந்துகளைத் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக, அவற்றை மருந்துக்கடைகளில் வாடிக்கையாளர்களின் காட்சிக்கு வைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் எஸ்.ஈஸ்வர ரெட்டி மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், மத்திய அரசின் மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரிய அறிவுறுத்தலின்படி, சில்லரை விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு மருந்துக்கடையிலும், ஜெனரிக் எனப்படும் பொதுப்பெயரிலான மருந்துகளைத் தனி அலமாரியில் வைத்திருக்க வேண்டும். மலிவு விலையில் பொதுமக்களுக்கு மருந்துகள் கிடைக்க மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப இதை மருந்துக்கடைகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.