கோவை : இஸ்லாமியர்களின் புனித நாளான ரமலான் பண்டிகை மாதத்தில் ஜகாத், பித்ரா மற்றும் சதகா ஆகிய தர்மங்களை செய்வதன் மூலம், எந்தப் பண்டிகையையும் கொண்டாட முடியாத ஏழை, எளிய மக்களின் வீடுகளிலும் மகிழ்ச்சி செழிக்கிறது.
கோவை : இஸ்லாமியர்களின் புனித நாளான ரமலான் பண்டிகை மாதத்தில் ஜகாத், பித்ரா மற்றும் சதகா ஆகிய தர்மங்களை செய்வதன் மூலம், எந்தப் பண்டிகையையும் கொண்டாட முடியாத ஏழை, எளிய மக்களின் வீடுகளிலும் மகிழ்ச்சி செழிக்கிறது.

இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்க்கையில் முக்கிய கடமையாக ஐந்து கடமைகளை ஆற்ற வேண்டும் என இஸ்லாம் சொல்கிறது. இதில், இறைவன் ஒருவனே என்ற நம்பிக்கை இஸ்லாத்தில் முதன்மையாக உள்ளது. பின்னர் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய கடமைகளும் அடங்கும்.
மனித ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், இறைவழிபாடு போன்றவை நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கமாகும். பிற நாட்களைவிட நோன்பு இருக்கும் காலத்தில்தான் மனிதன் இறைவனுடன் நெருங்குவதாகக் கூறப்படுகிறது. மற்ற நான்கு கடமைகளை நிறைவேற்றும்போது உடலால் தன்னை வருத்திக் கொள்ளும் நிலை ஏற்படாது. ஆனால், நோன்பு கடமையை நிறைவேற்றும்போது மட்டும் பசி, தாகம் போன்றவற்றால் உடல் ரீதியாக சிரமம் ஏற்படும். அந்த சிரமத்தை சகித்து இறைவனுக்காக நோன்பு வைப்பதால் அந்த அர்ப்பணிப்பு இறைவனுக்கு பிடிப்பதாக இஸ்லாம் மதம் போதிக்கிறது.
சூரிய உதயத்துக்கு முன்பாகவே நோன்பு தொடங்கிவிடுகிறது. அதேபோல, சூரியன் மறைந்த மாலைப்பொழுதில் நோன்பு முடிந்து விடுகிறது. நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிலக்கு உடையவர்கள், பயணத்தில் இருப்போர், வயதானவர்கள் ஆகியோர் நோன்பு இருக்க வேண்டியதில்லை.
ஏழைகளுக்கு உதவும் ஜகாத் கடமை;

வறுமை ஒரு மனிதனை இறைவனை மறுக்க வைக்கும். அதேபோல, மன்னிக்கப்படாத பெரும் பாவத்தை செய்யத் தூண்டும் அளவுக்கு நம்மை கொண்டு செல்லும். ஆக குற்றங்களுக்கு காரணமான வறுமை களையப்பட ஏழை எளியோறும், பசியின்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆகவே, இஸ்லாமியர்கள் ஏழை, எளிய இஸ்லாமியர்களுக்கு தனது வாழ்நாளின் முக்கிய கடமையான பசியாற்றுதலை செய்கின்றனர்.
ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பதுடன் கடமை முடிந்துபோவதில்லை. இதில், முக்கியமானதாக பார்க்கபடுவது என்னவென்றால் ‘ஜகாத்’. இதில், நம்மிடம் கடந்த ஓராண்டில் சேமித்து வைக்கப்பட்ட பணம், நகை ஆகியவற்றின் மீது இரண்டரை சதவீதத் தொகையை எடுத்து ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
கோவையில் ஜகாத்தால் பயன்படும் இஸ்லாமிய ஏழைகள்:

கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் ஏழை, எளிய இஸ்லாமியர்களுக்கு பள்ளிவாசல்கள் மூலமாக வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. அதேபோல, ஜமா அத்தே இஸ்லாமிக் ஹிந்த் சார்பாக கோவை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்புரம், சுகுணாபுரம், கல்லூரி காடன், வெள்ளலூர், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், ஜி.எம்., நகர், குறிச்சி பிரிவு போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கப்பட்டது. இதில், அவரவருக்கு தகுந்தாற்போல ரூ.1,700, ரூ.1,300, ரூ.1,000 ஆகிய விலைகளின் அடிப்படையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. அதேபோல, 40 பெண்களுக்கு சுயதொழில் செய்ய தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் மாத கடைசி நாளில் பிறை பார்த்து மறுநாள் ஈகைப் பெருநாள் கொண்டாடப்படும். பிறை பார்த்ததில் இருந்து ஈகைப் பெருநாளுக்கான தொழுகைக்கு செல்வதற்கு முன்பு ஜகாத்தை போல, பித்ரா என்ற ஏழைகளுக்கு உதவும் கடமையை ஆற்ற வேண்டும்.

இதுகுறித்து ஜமா அத்தே இஸ்லாமிக் ஹிந்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான ஹக்கீம் கூறியதாவது :- ஏழை, எளிய இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் பசியின்றி மகிழ்ச்சியுடன் பண்டிகை கொண்டாட வேண்டும். இதைத்தான் எங்களது இஸ்லாம் மதம் சொல்கிறது. ஆகவே, நாங்கள் பல்வேறு பகுதியில் உள்ள ஏழைகளுக்கு உதவி வருகிறோம். இதில், பண்டிகை நாளுக்கு முன்பு ஏழைகளுக்கு அரிசி அல்லது கோதுமை 2,400 கி.கி வழங்க வேண்டும்.

ஒரு குடும்பத்தில் 6 பேர் இருக்கிறார்கள் எனில், 6 பேருக்கும் கணக்கிட்டு பித்ரா தர வேண்டும். ஜகாத், பித்ரா தவிர சதகா எனப்படும் பிற தர்மங்களையும், இம்மாதத்தில் அதிகம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆகவே, நாங்கள் எங்களது முக்கிய கடமையாக இந்த உதவும் பணியை செய்து வருகிறோம், என்றார்.