கோவை: கோவை - பெள்ளாச்சி நான்கு வழி நெடுஞ்சாலை திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது 75 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விட்டதாக அந்த சாலையின் திட்ட மேலாளர் உதய் சங்கர் தெரிவித்தார்.
கோவை: கோவை - பெள்ளாச்சி நான்கு வழி நெடுஞ்சாலை திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது 75 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விட்டதாக அந்த சாலையின் திட்ட மேலாளர் உதய் சங்கர் தெரிவித்தார்.
பயன்பாடு
கோவை முதல் பொள்ளாச்சி வரையிலான சாலையில் நாள்தோறும் பல ஆயிரக் கணக்கான வாகனங்கள் பயணிகின்றன. பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்கள் செல்லவும், கேரளா மாநிலம் செல்லவும் இது பிரதான சாலையாக உள்ளது.

இதனிடையே பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு வேலைக்கு செல்ல பல ஆயிரம் பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் , பேருந்துகள் என பயணித்து வருகின்றனர். இதனால் கோவை-பொள்ளாச்சி சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வந்தது.
நெடுஞ்சாலை
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேசிய நெஞ்சாலை துறையின் கீழ் ஈச்சனாரியில் இருந்து பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி வரை 26.85 கிலோ மீட்டர் வரை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது.

36 மீட்டர் அகலத்துக்கு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் இந்த பணிக்காக ரூ.415 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த சாலை மார்க்கமாக வரும் கிணத்துக்கடவு, ஒத்தகால்மண்டபம், ஈச்சனாரி, முள்ளுபாடி ஆகிய பகுதிகளில் நான்கு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.
கான்கிரீட் சாலை
தேசிய நெடுஞ்சாலைகள் தார் மூலமாக அமைப்பது தான் தான் வழக்கம். ஆனால் பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை கான்கிரீட் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. 9 மீட்டர் அகலத்தில், ஒரு அடி உயரத்தில் அமைக்கப்படும் இந்த சாலையில், நவீன எந்திரம் மூலம் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து இந்த சாலையின் திட்ட மேலாளர் உதய் சங்கர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
26.85 கிலோ மீட்டர் தூரமும் உள்ள சாலை முழுக்க கான்கிரீட் சாலையாக அமைக்கப்படுகிறது. தார் சாலையை விட கான்கீரிட் சாலை அமைப்பதால் பராமரிப்பு செலவு குறைவு. இது மத்திய அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நவீன எந்திரம் மூலம் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும். தற்போது வரை 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது." என்றார்.
டயர்கள்?
இந்த கான்கிரீட் சாலை மழைக் காலங்களில் வழுக்கும் அபாயம் உள்ளது என்றும், வாகனங்களின் டயர்கள் விரைவில் தேய்ந்துவிடும் ஆபாயம் உள்ளது என்று வாகன ஓட்டிகள் சிலர் அச்சம் தெரிவித்தனர்.
இதற்கு நெஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் பதிலளிக்கையில், "கான்கிரீட் சாலை வழுக்காமல் இருக்க நவீன இயந்திரங்கள் மூலம் கிரிப் என சொல்லக்கூடிய சாலை பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைக் காலங்களில் எந்த பாதிப்பும் வராது. வாகனங்களின் டயரும் சீக்கரமாக தேய்ந்து போகாது." என்றார்.
சுங்கச்சாவடி
பொதுவாக தார் சாலைகள் அமைக்கப்படும் போதே சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பது நம் நாட்டில் வழக்கமான ஒன்று. தற்போது கோவை-பொள்ளாச்சி இடையே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தார் சாலைகள் அமைப்பதைக் காட்டிலும், சிமெண்ட் சாலை அமைப்பதற்கு கூடுதல் செலவாகும்.
எனவே, இந்த சாலையில் சுங்கச்சாவடி அமைக்கும் பொருட்டு அதில், பிற சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா? என்ற அச்சம் வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்துள்ளது.