நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் உள்ள ஸ்ரீ பொம்மதேவர் கோயிலில் பழங்குடியினர் சிவராத்திரி விழாவை கோலாகலமாக கொண்டாடினர். இதனை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் உள்ள ஸ்ரீ பொம்மதேவர் கோயிலில் பழங்குடியினர் சிவராத்திரி விழாவை கோலாகலமாக கொண்டாடினர். இதனை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, தொரப்பள்ளி, பொக்காபுரம், சொக்கநள்ளி கிராமங்களில் ஏராளமான பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்கள் தெப்பக்காட்டில் உள்ள ஸ்ரீ பொம்மதேவர் கோயிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டுக்கான விழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14-ம் தேதி சிவனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. 15-ம் தேதி பழங்குடியின மக்களின் கலாச்சார ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடந்தது.
விழாவில் பங்கேற்க முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, தொரப்பள்ளி, பொக்காபுரம், சொக்கநள்ளி, பந்திப்பூர் பகுதிகளில் பெட்டுக்குறும்பர் மற்றும் இருளர் மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்கள் கடந்த நான்கு நாட்களாக கோயில் வளாகத்திலேயே தங்கி விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். இன்று காலை முதல் மாலை வரை பழங்குடியினர் மக்கள் கோயில் வளாகத்தில் தங்கள் கலாச்சார நடனங்களை ஆடி மகிழ்ந்தனர். பழங்குடியினரின் நடனங்களை பொதுமக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இரவு பழங்குடியின மக்கள் தங்கள் நேர்க்கடனை நிறைவேற்ற பூங்குண்டத்தில் இறங்கினர்.