69-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியேற்றினார்.
ஜனவரி 26
69-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியேற்றினார்.
நாடு முழுவதும் இன்று இந்தியாவின் 69-வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். பின்னர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
முன்னதாக, மெரினாவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வந்த ஆளுநர், முப்படை அதிகாரிகளுடன் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து சென்னை காமராஜர் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு தினவிழா நடக்கும் இடத்துக்கு வருகை தந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தலைமைச் செயலாளர் ஆளுநரை வரவேற்றனர். இதனையடுத்து, அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறியது. இது பார்வையாளர்களின் கண்களைக் கவர்ந்தது.

69-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில், பள்ளி, கல்லூரி மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று குடியரசு தலைவர் விருது அளிக்கப்படும். அந்த வகையில் இந்த இந்தாண்டுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் 23 அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறை அலுவலர்கள் சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் மனோகரன் மற்றும் காவலர் நலன் கூடுதல் டிஜிபி ராஜிவ் குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
• கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் திருவண்ணாமலையைச் சேர்ந்த சாதிக் பாஷா-வுக்கு வழங்கப்பட்டது.
• வேளாண்மை துறை சிறப்பு விருது தருமபுரியை சேர்ந்த முனுசாமிக்கு வழங்கப்பட்டது.
• காந்தியடிகள் காவலர் பதக்கம் : கண்ணன் - தஞ்சை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் எஸ்.பி, ராமகிருஷ்ணன் - சேலம் மத்திய புலனாய்வுப் பிரிவு சார்பு ஆய்வாளர்.
* வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சண்முகத்திற்கு வழங்கப்பட்டது.