கோவை ரயில் நிலையத்தில் லிப்ட் மற்றும் சாய் தள வசதிகள் இல்லாததால், நடைமேடைக்கு செல்லும் மாற்றுத்திறனாளி பயணிகள், கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கோவை, ஜனவரி 23
கோவை ரயில் நிலையத்தில் லிப்ட் மற்றும் சாய் தள வசதிகள் இல்லாததால், நடைமேடைக்கு செல்லும் மாற்றுத்திறனாளி பயணிகள், கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் ரயில் நிலையத்தில், தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பயணிகளும் வந்து செல்கின்றனர். இங்கு, மொத்தம் ஆறு நடைமேடைகள் உள்ளன. ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், நடைமேடையை அடைவதற்கு படிக்கட்டுகளை பயன்படுத்தி மட்டுமே செல்ல முடியும். முதியோர்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும் பயன்படும் விதமாக அமைக்கப்பட்ட எஸ்கலேட்டர், பெரும்பாலும் இயங்குவதில்லை. லிப்ட் வசதி அமைப்பதற்கான பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று இன்னும் நிறைவடையாமல் உள்ளது. இதனால், சரக்குகளை எடுத்துச் செல்லும் அபாயகரமான தண்டவாளப் பாதையை பயன்படுத்தி சக்கர நாற்காலிகளில் வரும் மாற்றுத் திறனாளிகள் நடைமேடையை அடையும், அவல நிலை ஏற்பட்டுள்ளது.

'கடந்த சில தினங்களுக்கு முன் ரயிலில் வந்திறங்கிய எனது நண்பர்களை வரவேற்பதற்காக ரயில் நிலையம் சென்றிருந்தேன். நுழைவு வாயிலில், சக்கர நாற்காலிகள் வந்து செல்ல வசதியாக அமைக்கப்பட்டுள்ள சாய்வு தளத்தை பயன்படுத்தி உள்ளே சென்றுவிட்டேன். ஆனால், நடைமேடைக்கு செல்ல, மாற்று திறனாளிகளுக்கான, எந்த சிறப்பு வசதிகளும் இல்லை. அங்குள்ளவர்களை விசாரித்தபோது, கனரக சரக்குகளை எடுத்துச் செல்லும் பாதையில் செல்லுமாறு கூறினர். ரயில்கள் வந்து செல்லும் தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடந்து, நடைமேடையை அடைந்தேன். வெளியூரிலிருந்து வந்திறங்கும் மாற்றுத்திறனாளி பயணிகளும், முதியவர்களும் இந்த பாதையை மட்டுமே பயன்படுத்த முடியும். இதுபோன்ற பிரச்சனைகளால் தான், மாற்றுத்திறனாளிகள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்து விடுகின்றனர்.' என்று வேதனையோடு தெரிவித்தார் மாற்றுத்திறனாளி ஜெகதீஸ்.

ரயில் நிலையத்தில் இப்படியென்றால், கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்று திறனாளிகளுக்கான சாய்வு தளம், துணிகளைக் காய வைக்கும் மேடையாக மாறியுள்ளது. பிறப்பு, இறப்பு மற்றும் வருமான வரி சான்றிதழ்களை பெருவதற்கும், பல்வேறு வரிக் கட்டணங்களை செலுத்துவதற்கும் நாள்தோறும் ஐநூறுக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கென்று எந்த வசதிகளும் இங்கு அமைக்கப்படவில்லை என்று புகாரளிக்கின்றனர் பொதுமக்கள்.

'மாநகராட்சி தொடர்பான பணிகளுக்கும், அரசின் திட்டங்களில் இணைவதற்கும், பொதுமக்கள் அனைவரும் இங்குதான் வர வேண்டும். குறிப்பாக, சாய்வு தள நடைமேடை இருந்தால் மட்டுமே, மாற்றுதிறனாளிகள் இங்கு வந்து செல்ல முடியும். பல மாதங்களுக்கு முன் கட்டத் தொடங்கிய சாய்வு மேடை, இன்றுவரை பயன்பாட்டிற்கு வராததால் பல சிரமங்களை சந்தித்து வருகிறோம்.' என்று கூறினார், காந்திபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேசன்.

கடந்த நான்கு மாதங்களாக, யாருக்கும் பயன்படாமல் காட்சியளிக்கும் இந்த சாய்வு தளம், விரைவில் கட்டிமுடிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இவை மட்டுமின்றி, பெரும்பாலான மக்கள் வந்து செல்லும் முக்கிய இடங்களிலும், குறிப்பாக, அரசு அலுவலகங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.