டிசம்பர் 24
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அவரது சொந்த தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக, தினகரன் அணி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.
இதனைத்தொடர்ந்து, பல்வேறு பரபரப்புக்கு இடையே வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் இன்று (டிசம்பர் 24) நடைபெற்றது. இதில் ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கிய டி.டி.வி. தினகரன் 89,013 வாக்குகள் பெற்று 40.707 வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியினை பெற்றார். இதற்கு அடுத்தபடியாக மதுசூதனன் (அதிமுக) 48,306 வாக்குகளும், மருதுகணேஷ் (திமுக) 24,651 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், திமுக, பாஜக உள்ளிட்ட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பாஜக 1417 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் அதனை விட நோட்டா அதிக வாக்கினை அதாவது 2323 வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.