டிசம்பர் 23
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் இன்று டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னை திரும்பினர். அவர்களுக்கு செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் ஆர். ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள்மீது போடப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக நீதிபதி கூறியுள்ளார். வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்றிருந்த கனிமொழி, ஆ. ராசா ஆகியோர் 2ஜி வழக்கில் விடுதலையான பின்னர் சென்னை திரும்புவதாக கூறப்பட்டது. இதையொட்டி, விமானநிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆ. ராசா, கனிமொழி ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை, நேரில் சென்று மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆகியோர் வரவேற்றனர். இவர்களது வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்தில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். மேலும், விமான நிலையம் அருகே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே கனிமொழியைப் புகழ்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என விமானநிலையப் பகுதியே களைகட்டியது.