கோவை, டிசம்பர் 23
அரசுப் பேருந்து தினமும் தாமதமாக வருவதால் சரியான நேரத்திற்கு பள்ளி கல்லூரிக்கு செல்ல முடிவதில்லை என்று கூறி 5 பேருந்துகளை வெள்ளலூர் பகுதி பொதுமக்கள் இன்று காலை சிறைபிடித்தனர்.

வெள்ளலூர் பகுதியில் இருந்து சிங்காநல்லூர் மற்றும் காந்திபுரம் பகுதிக்கு செல்வதற்கு 74 இலக்கமிட்ட 6 பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வெள்ளலூர் பகுதிக்கு வருவதில்லை என்றும் இதனால் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தினமும் தாமதமாகவே செல்லவேண்டி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், வழக்கம்போல் இன்று காலையும் பேருந்து தாமதமாகவே வந்தது. இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் அடுத்தடுத்து வந்த 5 பேருந்துகளையும் சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அங்கு சென்ற போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
பொதுமக்களின் இந்த திடீர் பேராட்டத்தால் வெள்ளலூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.