கோவை, டிசம்பர் 23
கோவை அருகே மருத்துவ செலவை ஏற்க மறுத்தத் தனியார் பேருந்து உரிமையாளரைக் கண்டித்து பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளப்பாளையத்தில் இருந்து உக்கடம் நோக்கி தனியார் பேருந்து (எண் 37) காலை 6.30 மணிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, கேரளாவில் இருந்து எல்என்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக அவினாசி சாலையை சென்றடைவதற்காக லாரி ஒன்று வந்தது. அதிகாலை நேரம் என்பதால், சாலை விதிகளை மீறி ஓடிய அந்தப் பேருந்து, லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்து ஓட்டுநரின் கால்கள் துண்டாகின. மேலும், பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் பலத்த காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து, தனியார் பேருந்தின் உரிமையாளர் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு குவிந்திருந்த படுகாயமடைந்த பயணிகளின் உறவினர்கள், அவரை முற்றுகையிட்டு, மருத்துவ சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொள்ளுமாறு முறையிட்டனர். ஆனால், அதனைப் பேருந்து உரிமையாளர் ஏற்க மறுத்தால், இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த படுகாயமடைந்த பயணிகளின் உறவினர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், சிந்தாமணிபுதூர் பிரிவில் இருந்து சூலூர் வரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த சூலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உரிய நிவாரணம் பெற்றுத் தருவதாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.