கோவை, டிசம்பர் 18
கோவை - திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் தொடர் விபத்துக்களினால் அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை முதல் நாகப்பட்டினம் வரையில் வயதானவர்கள், குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் பயணிக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக NH.67 உள்ளது. கோவையிலிருந்து சிங்காநல்லூர், பல்லடம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் சென்றடைகிறது இச்சாலை.
தென் இந்தியாவின் முக்கிய தொழில் நகரமாக விளங்கி வரும் கோவை மாவட்டம், தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது. கோவை மாவட்டத்திற்கு கிழக்கு மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் வர அதிகமாகப் பயன்படுத்தும் வழித்தடமாக பல்லடம் சாலை விளங்குகிறது. இந்த வழித்தடத்தில் அரசு மற்றும் தனியார் என 500 பேருந்துகளுக்கு மேல் இயக்கப்படுகின்றன. மேலும், ஆயிரக்கணக்கில் கனரக மற்றும் இருசக்கர வாகனங்கள் இந்தச் சாலையை கடந்து செல்கின்றன.
இந்நிலையில், பல்லடம் எல்லைக்கு உட்பட்ட காரணம்பேட்டை முதல் மாதாப்பூர் பகுதி வரையிலான சுமார் 13 கிலோ மீட்டர் சாலையில் தொடர்ச்சியாக ஏற்படும் விபத்துக்களால், அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுவதோடு படுகாயம் அடைவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் இந்தத் தொடர் விபத்துக்களைத் தடுக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் முத்தையா திருஞானசம்பந்தர் கூறியதாவது, பயணிகளின் தேவைகளுக்காக இயக்கப்படும் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையைப் பந்தய சாலையாக நினைத்து அதன் ஓட்டுநர்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாலும், சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக அளவில் பயணிகளை ஏற்றி படிக்கட்டுகளில் தொங்கியபடி சாகசப்பயணம் செய்வதாலும் அது விபத்துக்களுக்குக் காரணமாகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் அலைபேசியில் பேசியவாறே இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் ஏற்படுத்தும் விபத்து அடுத்தவர் உயிருக்கு உலைவைக்கும். இவர்களைப் போன்றவர்களால் தான் அதிக அளவில் சாலைவிபத்துக்கள் ஏற்படுகிறது. போக்குவரத்து சாலை விதிமுறைகளை மீறி தாறுமாறாக வாகனங்களைப் படுவேகத்தில் இயக்குவதைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
நெடுஞ்சாலையில் நடைபெறும் விபத்துக்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபொழுது “தங்களுக்கு சாலை ஓரமுள்ள செடிகளை வெட்டுவது, சாலை நடுவே உள்ள தடுப்புக்களுக்கு வெள்ளையடிப்பது போன்ற பணிகளுக்குத்தான் அதிகாரமுள்ளது என்றார்.
பல்லடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 13 கிலோ மீட்டர் சாலையை அவினாசியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையைப்போல் விரிவுபடுத்தி மையத்தடுப்பு ஏற்படுத்துவதோடு பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும், காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை இணைந்து அதி வேகத்துடனும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.