கோவை, டிசம்பர் 18
திருச்சி சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரின் (செண்டர் மீடியன்) அகலத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநகர காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் இருந்து துவங்குகிறது திருச்சி சாலை. பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ள இந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டுவருகிறது.

அவினாசி சாலையுடன் ஒப்பிடுகையில், இந்த சாலை சற்றே குறுகலானது. இருவழிப்பாதை கொண்ட இந்த சாலையின் இருபுறங்களிலும் கட்டிடங்கள் இருப்பதால் இந்த சாலையில் பார்க்கிங் செய்வது என்பது சிரமமான ஒன்றாக உள்ளது.
சாலையில் பார்க்கிங் செய்யப்படும் கார்கள் மீண்டு புறப்படும் போது பின்னால் வரும் வாகனங்கள் அவ்வப்போது மோதி சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இந்த சாலையை இரு புறமாக பிரிக்கும் விதமாக சாலையின் நடுவில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புச்சுவர் அதிக அகலமாக இருப்பதாகவும், தடுப்புச் சுவரின் அகலத்தை குறைத்தால் சாலை சற்றே விரிவாகும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தடுப்புச்சுவரின் அகலத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் சிம்ப்ளி-சிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருச்சி சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் அரசு மருத்துவமனை அருகே தொடங்கி ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை நீள்கிறது.
இந்த தடுப்புச் சுவரின் அகலம் 3.5 அடியாக உள்ளது. இந்த அகல இடைவெளியில் செயற்கை புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது.

தடுப்புச்சுவரின் அகலத்தை குறைக்கும் போது சாலையில் சற்று கூடுதல் இடம் கிடைக்கும் என்ற பரிந்துரைகள் வந்தன.
அதன்படி, தடுப்புச்சுவரின் அகலத்தை குறைக்க முடிவு செய்துள்ளோம்.
அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் 1.5 அடி அகலம் உடையது. இதே போலவே திருச்சி சாலையிலும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை கோவை மாநகராட்சியுடன் இணைந்து விரைவில் செயல்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.