கோவை, டிசம்பர் 14
குமரியை கேரளத்துடன் இணைத்து விடுங்கள் என மக்கள் கூறுவது முதலமைச்சருக்கு அவமானம் என டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி விமர்சனம் செய்துள்ளார்.
டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் காரில் சென்ற போது விபத்துக்குள்ளானதில், படுகாயம் அடைந்தார். இதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கொள்ளையர்களை பிடிக்கச் சென்று வீர மரணம் அடைந்து சாதனைபடைத்துள்ள காவல் ஆய்வாளர் பெரிய பாண்டிக்கு வீர வணக்கத்தைக் கழகம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் இருந்து வடமாநிலத்தவர்கள் கொள்ளை அடிப்பது நிறைய நாட்களாக நடந்து வருகிறது. மத்திய அரசு மற்றும் மத்திய காவல்துறையும் வடமாநில கொள்ளையர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு, ஆட்சியில் இருந்து கொள்ளை அடிப்பவர்களை ஒன்று செய்ய முடியவில்லை. இதில், வெளி மாநிலத்தில் இருந்து கொள்ளை கும்பல் வருகிறது.
ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரனே வெற்றி பெறுவார் என ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி. டிடிவி தினகரன் வெற்றி நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது. தமிழக மக்களிடம் இருந்து கொள்ளை அடித்த பணத்தை அமைச்சர்கள் ஆர்.கே.நகரில் செலவு செய்யத் தயாராக உள்ளனர். அமைச்சர்கள் கொடுக்கும் பணத்தை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் வாங்க வேண்டும். அந்தப் பணத்தை வாக்காளர்களுக்குச் சேர்க்காமல், நல்லகாரியத்திற்கு பயன்படுத்துங்கள்.
அரசியல் அனாதைகள் தான் குக்கரைப் பற்றி விமர்சிப்பார்கள், அதைப் பற்றி கவலை இல்லை. பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 3 ஆயிரம் ஓட்டு வாங்கினால் கட்சியில் இருந்தே விலகிக் கொள்கிறேன். திருமாவளவனை பாஜகவினர் வம்புக்கு இழுக்கின்றனர். இது தேவையற்றது.
டிடிவி தினகரனுக்கும், இரட்டை இலைச் சின்ன வழக்கிற்கும் தொடர்பில்லை. சுகேஷ் சந்தரசேகர் யாருக்காக பணம் கொடுக்க வந்தார், யாருக்குக் கொடுக்க வந்தார் எனத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர். எனவே, தான் தேவையில்லாமல் வாய்விட்டு வருகின்றார். தேர்தலில் வெற்றி பெற்றால் எஞ்சி உள்ள தொண்டர்களும், அமைச்சர்களும் தினகரன் அணியில் சேர்வார்கள்.
குமரியை கேரளாவில் இணைத்து விடுங்கள் என மக்கள் கூறும் நிலையை விட அவமானம் எதுவும் இல்லை. குமரிக்கு முதலமைச்சர் சென்ற நிலையைப் பாருங்கள். ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால், குமரியில் நான்கு ஐந்து அமைச்சர்கள் முகாமிட்டு இருப்பார்கள். ஆனால், தற்போதைய முதலமைச்சர் ஆட்சி போய்விடும், அமைச்சர்கள் வசூல் போய்விடும் என பயந்து சென்னையிலே முகாமிட்டு உள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை. பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்காது. தேர்தலை நடத்துவது, பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜனும், பிரதமர் மோடியும் தான். குக்கரில் பணம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தின் எதிர்க்கட்சி திமுக இல்லை, டிடிவி தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்க்கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.