சென்னை
சிறுமி ஹாசினி மற்றும் தாய் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட தஷ்வந்த் மீது பெண்கள் சிலர் கடும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின், ஜாமீனில் வெளியே வந்திருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாயை கொன்று விட்டு தலைமறைவாக இருந்த நிலையில் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட தஷ்வந்த், காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் தாயை கொன்றது ஏன் என்றும், பணம் கொடுக்காமல் இருந்ததால் தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார். தனது கொலையை ஒப்புக்கொண்டதால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து தஷ்வந்த் இன்று செங்கப்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டார்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பெண்கள் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அவர்களிடம் இருந்து தஷ்வந்தை மீட்ட காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
பின் வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி, சிறுமி ஹாசினி மற்றும் தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்தை வரும் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
வழக்கறிஞர் விலகல்:-
இதனிடையே ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் விஜயகுமார் இந்த வழக்கில் இருந்து விலகி விட்டார். தஷ்வந்திற்காக இனி ஆஜராகப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.