கோவை, டிசம்பர் 11
மாநகராட்சி பள்ளிகளுக்கான ”பாலஜனகிரஹா 2017” குடிமையியல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சிகளில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அறம் பொதுநல அறக்கட்டளை மாநகராட்சியுடன் இணைந்து தொடர்ந்து 2-வது ஆண்டாக ”பாலஜனகிரஹா 2017” என்ற குடிமையியல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சித் திட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநகராட்சி பள்ளிகளில் 8-ம் வகுப்பைச் சேர்ந்த 150 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதில், மாணவ, மாணவியர்களுக்கு நமது, உரிமைகள், நமது நகரத்தின் கட்டமைப்பு, போக்குவரத்து, அரசாங்கம், நமது அரசியலமைப்பு உரிமைகள், வளங்கள் பாதுகாத்தல், பேரழிவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி ஒவ்வொரு பள்ளிகளிலும் 25 மணிநேர வகுப்புகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பான 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் பள்ளிக்கு அருகிலிருக்கும் சாலையை ஆய்வு செய்து, அதில் இருக்கும் தேவைகள், பிரச்சனைகள், தீர்வுகள் குறித்து ஒரு விளக்கவுரை பதிவு செய்து கணினியில் காட்சி விளக்கப் படங்களுடன் விளக்கிக் காட்டினர். மேலும், நடுவர்கள் சில கேள்விகள் கேட்டு அவர்களின் பேசும் திறமை மற்றும் புரிந்துணர்தல் ஆகியவற்றை பரிசோதித்தனர். இதில், சிறப்பாக விளக்கிக் காட்டிய எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் பள்ளி முதலிடமும், ராமசாமி நகர்பள்ளி 2-ம் இடமும், செல்வபுரம் பெண்கள் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றது.

பாலஜனகிரஹா திட்டத்தினால் ஒவ்வொரு குழந்தையையும் நாளைய பங்கேற்கும் குடிமக்களாக உருமாற்றம் பெற்று அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உறுதுணையாக அமையும். சிறுவயதில் இதை அவர்கள் உணர்ந்தால் வருங்கால குடிமக்கள் மிகவும் பொறுப்புள்ளவர்களாக நாட்டின் மேம்பாட்டிற்கு செயல்படுவார்கள் என அறம் பொதுநல அமைப்பினர் தெரிவித்தனர்.