டிசம்பர் 4
குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த காட்டெருமை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

மலை மாவட்டமான நீலகிரியில் யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக, காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிகளிலும், நகரின் மையப்பகுதிகளிலும் உலா வருகின்றன. இதனால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், வாகனங்களில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் காட்டெருமைகளால், விபத்துக்குள்ளாகி பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் முனியாண்டி (58) என்பவர் வீட்டு வாசலில் காட்டு எருமை இருப்பதை கவனிக்காமல் வெளியே வந்துள்ளார். அப்போது, அவரை காட்டெருமை தூக்கி வீசியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த முனியாண்டியின் தலையில் பலத்த அடிபட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முதலுதவி செய்யப்பட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 14 தையல் போடப்பட்டது. காட்டெருமைகளின் தொடர் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு வலியுறுத்தினர்.