கோவை, நவம்பர் 17
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் கூறினார்.
கோவையில், தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த தமிழக சுகாதார துறை அமைச்சர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சென்னை மருத்துவ தலைமையிடம் என்பதை மாற்றி அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, மாவட்ட மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 280 கோடி ரூபாய் ஜெய்கா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் 837 ரத்தவகை கண்டறியும் கருவி வழங்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகம் முழுவதும் சமீபத்தில் 800 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவத் துறையில் போலியாக செயல்படும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.