பல்லடம், நவம்பர் 7: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி விசைத்தறிகளை நிறுத்தி ஊர் பொதுமக்கள் ஆயிரக்கனக்கானோர் காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பள்ளபாளையம் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை நீதிமன்ற உத்தரவை அடுத்து அங்கிருந்து அகற்றப்பட்டது.
இதனை அடுத்து காளிபாளையத்தில் திறக்கப்பட்ட இக்கடை அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அடைக்கப்பட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தேவராயம்பாளையத்தில் சதீஸ்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இப்பகுதியில் குடியிருந்து வரும் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்திற்கும் டாஸ்மாக் நிர்வாக த்திற்கும் புகார் மனு அளித்தனர்.
இதனிடையே டாஸ்மாக் கடையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று அப்பகுதி பொதுமக்கள் சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை நிறுத்தி ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தனியார் மண்டபத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றவேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.
பொதுமக்களின் இப்போராட்டம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.