கோவை, அக்டோபர். 28: கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை ஆதாய நோக்கில் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முயன்ற இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி பகுதிய சேர்ந்தவர் வேலுச்சாமி. அவரது மகன் சந்திரசேகர்(40).. விபத்து ஒன்றில் சிக்கிய இவர் நேற்று காலை 11 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு பொள்ளாச்சியை சேர்ந்த ஜான் என்ற முருகன் (47) என்பவர் வந்தார். மேலும் சந்திரசேகரிடம், வழக்கு நடத்தி காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் பணம் பெற்று தருவதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்றும் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால், இதை சந்திரசேகர் மறுத்ததோடு, அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக, அங்கு பணியில் இருந்த ரமேஷ்ராஜா என்ற மருத்துவருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் ஜான்-ஐ அணுகி, 'எதற்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முயற்சி செய்கிறீர்கள்?' என்று கேட்டுள்ளார். அதற்கு, தனக்கு பின்னால் பெரிய அதிகாரிகள் இருப்பதாகவும், பகைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவரை ஜான் மிரட்டியுள்ளார். தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் ரமேஷ்ராஜா பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜான்-ஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில், வழக்கறிஞர்கள், மற்றும் காவல்துறையில் பணியாற்றும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், கைது செய்யப்பட்டவரிடம் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர் போலீசார்.
சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் பணத்திற்காக அரசு மருத்துவமனை செல்லும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் தரகர்கள் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதற்கு தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதே பாணியில் சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.