லாலிரோடு சந்திப்பில் கோவை காவல் துறையால் அமைக்கப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் சேவை எண் விழிப்புணர்வு பேனரை தனியார் விளம்பர போஸ்ட்டர்கள் ஆக்கிரமித்துள்ளன.

பொதுமக்களின் குறைகளை விரைவாகவும் எளிதாகவும் பெறுவதற்கு வசதியாக, 2016ஆம் வருடம் கோவை காவல் துறையால் தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பொதுமக்கள் தங்களின் குறைகளையும் புகார்களையும், புகைப்படங்களாகவும் காட்சிகளாகவும் பதிவு செய்து காவல்துறைக்கு நேரடியாக அனுப்பி வருகின்றனர். காவல்துறையினரும் உடனடியாக இந்த புகார்களை ஆராய்ந்து தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
இந்த சேவையை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நகரின் முக்கிய சந்திப்புகளில் வாட்ஸ் ஆப் சேவை எண் அடங்கிய பேனர்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. சந்திப்புகளில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், சாலையை கடக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் காவல்துறையினரின் வாட்ஸ் ஆப் சேவை எண்ணை குறித்துக்கொண்டு தங்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காவல்துறையின் வாட்ஸ் ஆப் சேவை பற்றிய பேனர்கள் தொடர்ந்து தனியார் போஸ்டர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மறைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, காவல்துறையை தொடர்புகொள்வதற்கான 24 மணி நேர சேவை எண்ணையே மறைத்தவாறு விளம்பர போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டுவதால் பொதுமக்களிடம் இந்த சேவையைக் கொண்டு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.