கோவையில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், இன்று மேலும் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.
கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த வினோத் சர்மா என்பவரது மகள் சுவாதி (24) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, சுவாதி அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். மேலும், நேற்று மாலை மருத்துவமனை நிர்வாகத்தால் அவரை காப்பாற்ற முடியாது என்றும் வீட்டிற்கு அழைத்துச்செல்லலாம் என்றும் கூறினர்.
தொடர்ந்து, சுவாதியின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். வீட்டிற்கு செல்லும் வழியியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொள்ளாச்சியை சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகள் சந்தியா (10) காய்ச்சல் காரணமாக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

இதே போல், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி (34) என்பவரும், தாராபுரம் பகுதியை சேர்ந்த சத்யா (27) என்பவரும் நேற்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.