கோவையில், மதுக்கரை பகுதிகளிலும் அதிகரித்து வரும் நாய்கள், பொதுமக்களின் கால்நடை வளர்ப்புப் பகுதிகளில் நுழைந்து அங்குள்ள கால்நடைகளை வேட்டையாடும் சம்பவம் தற்போது அதிகரித்து வருகிறது.
ஒரு கிராமப் பகுதியில் சில நூறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட அல்லது சாலையில் சுற்றித்திரியும் நாய்கள் காணப்படுகின்றன. அதுபோன்றே மரப்பாலம் அருகே உள்ள அம்பேத்கர் நகரிலும் பல நாய்கள் சுற்றி வருகின்றன. இவை சாலையோரம் உள்ள வீசப்பட்ட உணவுகளை, குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் உணவுகளை உணடு வாழ்ந்து வருகின்றன. இதில், சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால் அந்த நாய்களில் பல மக்களால் வளர்க்கப்பட்ட நாய்கள் ஆகும். அது அவற்றின் கழுத்தில் உள்ள பெல்ட்டின் மூலம் அடையாளம் காண முடிகிறது.

இப்பகுதியில் நாய்கள் அதிகமாக காணப்படும் நிலையில் அவற்றை வேட்டையாட ஒரு சிறுத்தையும் இங்கு வலம்வருகிறது. இதனால், மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கேரளாவில் மக்கள் வளர்த்து பின் கைவிடப்படும் நாய்கள் மதுக்கரைக்கு உட்பட்ட பகுதியிலேயே கொண்டுவந்து விடப்படுகின்றன. இந்த நாய்கள் இணைந்து ஒரு பெரும் கூட்டமாக உருவெடுத்துள்ளது. அவை மதுக்கரை மற்றும் செட்டிபாளையம் பிரிவில் அருகிலுள்ள பண்ணைகளில் நுழைந்து ஆடு, மாடுகள் மற்றும் கோழிகளை வேட்டையாடி வருகிறது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் அருகே உள்ள ஒரு பண்ணையில் நுழைந்து, மூன்று வெள்ளாடுகளைக் கொன்றது என்கின்றனர் மதுக்கரை வாசிகள். இப்பிரச்சனை கடந்த மூன்று மாதங்களாக அதிகரித்துள்ளது என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த ராஜன். இதில், பாலக்காடு பகுதிமக்கள் வளர்த்து வந்த நாய்களை பின் இடையூறுகள் காரணமான மதுக்கரைக்கு கொண்டு வந்து விடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த கிராமத்தில் இதுவரை பத்து ஆடுகள் கொல்லப்பட்டிருக்கின்றன. ஐந்து கால்நடைகளுக்கும் மேல் தாக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த நாய்களின் தாக்குதலுக்கு சுமார் 20 கோழிகளும் உயிரிந்துவிட்டன என்று அவர் கூறினார்.
மேலும், இந்த நாய்கள் அவ்வழியாக செல்லும் பயணிகளுக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.