கோவை நகரம் ஸ்மார்ட் சிட்டி நகரமாக மாற்றும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 'ஸ்மார்ட் பென்ச்' என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு மாதிரி திட்டத்தை செயல்படுத்தினர். இதன் மூலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பலர் தற்போது இந்த ஸ்மார்ட் பென்ச்யை பயன்படுத்தி வருகின்றனர்.

கோவை மாநகராட்சியில் வை-ஃபை வசதியுடன் சூரிய ஆற்றலில் இயங்கும் மரம் வடிவத்திலான 'ஸ்மார்ட் பென்ச்' மாநகராட்சி அலுவலகத்தில் முதல் முதலில் அறிமுகப்படுதப்பட்டுள்ளது. இந்த 'ஸ்மார்ட் பென்ச்' மூலம் இலவச வை-ஃபை வசதியும், காற்று மாசுபாட்டினை அளக்கும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மாநகராட்சிகளை மேம்படுத்தும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளதால் கோவையில் பல்வேறு இடங்களில் இந்த வகையான ஸ்மார்ட் பென்ச் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கூறுகையில் "முதல்கட்டமாக மாநகராட்சி முழுவதும் இது போன்ற சுற்றுச்சூழலுக்கு நன்மையான 30 ஸ்மார்ட் ட்ரீ அமைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தரப்பிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டெல்லியிலுள்ள ஸ்மார்ட் சிட்டி ஆணையமும் இத்திட்டத்தைப் பாராட்டியுள்ளது" எனக் கூறினார்.